Sports

பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா இந்தியா ? - வெளியான செய்திகள் என்ன ?

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்த சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், பிசிசிஐ-யின் பணபலத்துக்கு இதர ஆசிய அணிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இறுதியில் பாகிஸ்தான் இறங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆசிய கோப்பைக்கான அட்டவணையில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெற்றன.

தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் என்ற கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஊடகங்களில் வந்துள்ள செய்தியின் அடிப்படையில், வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கே இந்திய அணி பாகிஸ்தானுக்குப் பயணிக்குமா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். இதனால் ஒன்றிய அரசின் முடிவைப் பொறுத்தே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்பது முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "சிரித்துக்கொண்டே முட்டாள்தனத்தை மீண்டும் மீண்டும் செய்யவேண்டாம்" ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த ஸ்டெயின்