Sports

உலகக்கோப்பை டி20 தொடரில் ரிங்கு சிங்குக்கு இடம் கிடையாது : இதுதான் காரணமா ? வெளியான அதிர்ச்சி தகவல் !

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.

இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அதன் பின்னர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அடுத்து வரும் உலகக்கோப்பை டி20 தொடரில் ரிங்கு சிங்குக்கு இடம் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இங்குள்ள மைதானங்கள் மெதுவாக இருக்கும் என்றும், சுழற்பந்துக்கு ஏற்றவகையிலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய மெதுவான மைதானத்தில் ரிங்கு சிங் பெரிய அளவில் சோபிக்கவில்லை. சென்னையில் நடைபெற்ற போட்டியில் கூட அவர் தடுமாறினார். இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அவரை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர் யார் ? - பந்துவீச்சாளரை கை காட்டிய தினேஷ் கார்த்திக் !