Sports

" நாங்கள் வளரவேண்டாம் என்று நினைக்கிறீர்களா ?" - ICC-யை விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் வாரிய இயக்குனர் !

ஒருகாலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளே கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டிருந்தது. ஆனால், 90களின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது. 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின்னர் இந்திய ரசிகர்களின் கவனம் கிரிக்கெட்டை நோக்கி திரும்பியது.

இதனால் இந்தியா உலக கிரிக்கெட் அரங்கில் முக்கிய சக்தியாக மாறத்தொடங்கியது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்ததால் இந்தியாவில் கிரிக்கெட் தனது உச்சகட்ட வளர்ச்சியை எட்டத் தொடங்கியது. மேலும், ஐசிசி-க்கு வருமானத்தை அள்ளித் தரும் நாடாகவும் வளர்ச்சி அடைந்தது.

ஸ்பான்சர் உரிமம், ஒளிபரப்பு உரிமம் என இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை கட்டுப்படுத்தும் பிசிசிஐ கோடியில் வருமானம் ஈட்டத் தொடங்கியது. அதிலும் ஐபிஎல் தொடர் வந்தபின்னர் பிசிசிஐ-யின் வருமானம் அதன் அடுத்த உச்சத்தை தொட்டு ஐசிசி-யையே கட்டுப்படுத்தும் அளவு சென்றது.

Johnny Grave

ஐசிசி-யின் வருமானத்தில் பெரும்பங்கு இந்தியாவில் இருந்து செல்வதால் ஐசிசி தனது உறுப்பு நாடுகளுக்கு கொடுக்கும் தொகையிலும் இந்தியாவின் ஆதிக்கம் அதகரித்தவண்ணம் உள்ளது. அதன்படி புதிய வருமான பகிர்வு மாதிரி அறிமுகப்படுத்தப்பட்ட ஐசிசியின் வருமானத்திலிருந்து 38.5 சதவீத, பிசிசிஐ-க்கு கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து 6.89 சதவீதம், ஆஸ்திரேலியா 6.25 சதவீதம், பாகிஸ்தான் 5.75 சதவீதம் என பிரித்துக்கொடுக்கப்படும் நிலையில், இதர வாரியங்களுக்கான தொகைகுறைக்கப்பட்டுள்ளதால் அங்கு கிரிக்கெட் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கிரிக்கெட்டை அழிக்கும் செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐசிசி-யின் முடிவை வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜானி கிரேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " பழைய வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போதைய கிரிக்கெட்டுக்கு தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என நான் நினைக்கிறன். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் வலுவான நிலையை எட்டக்கூடாது என்பதற்கான அனைத்தையும் இந்த உலக கிரிக்கெட் செய்வதாக நாங்கள் உணர்கிறோம்.

எங்களுக்கு அதிக பணம் தருவதாக ஐசிசி சொல்கிறது. ஆனால் உண்மையில் எங்களுடைய வருவாய் 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஐசிசி குறைத்துள்ளது. இதற்கான காரணம் எனக்கு புரியவில்லை. இது எப்படி எங்களை வளர்க்கும் ? " என்று கூறியுள்ளார்.

Also Read: சர்ஃப்ராஸ் கான் இதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார், அதனால்தான் அவரை நீக்கினோம் - கங்குலி கூறியது என்ன ?