Sports

சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - IPL வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ?

2016-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, நேபாள அணியின் கேப்டனாக இருந்தவர் சந்தீப் லமிச்சானே. லெக் ஸ்பின்னரான அவர், அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் பெரும் கவனத்தை ஈர்த்தார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடந்த லீக் போட்டிகளில் பங்கேற்று அங்கும் சிறப்பாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் அவர் இடம்பெற்றார். தனது சிறப்பான செயல்பாடு காரணமாக நேபாள அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

அவர் மீது கடந்த ஆண்டு காவல்நிலையத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அவர் கூறியுள்ள புகாரில், நான் அவரின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன் முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். பின்னர் அவரை சந்தித்த நிலையில், 2 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் சிறுமிக்கு உடல்பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது நிரூபிக்கப்பட்டதாக நேபாள போலிஸார் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யபட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சந்தீப் லமிச்சானே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக காத்மாண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் வரும் ஜனவரி 10ஆம் தேதி அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதே நேரம் இது குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என சந்தீப் லமிச்சானே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: "திறமை இருந்தும் மோசமாக ஆடும் அணி என்றால் அது இந்தியாதான்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் விமர்சனம் !