Sports

"விராட் கோலியுடன் இரண்டு மாதம் இருக்கும் உணர்வை எப்படி சொல்வது ?" - மேக்ஸ்வேல் நெகிழ்ச்சி !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

எனினும் இந்தத் தொடரும் ஐபிஎல் அளவு பெரிய தொடராக வரவில்லை. இதனால் வெளிநாடுகளை சேர்ந்த பல வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் , ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வேல் என்னால் இனி நடக்கவே முடியாது என்ற நிலை வரும்வரை நான் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐபிஎல்தான் அநேகமாக நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். ஏனென்றால் ஐபிஎல் எனக்கு அவ்வளவு நன்றாக இருந்துள்ளது. என்னால் இனி நடக்கவே முடியாது என்ற நிலை வரும்வரை நான் ஐபிஎல் விளையாட விரும்புகிறேன். இரண்டு மாதங்களாக விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருடன் இருந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வை எப்படி சொல்வது.

ஐபிஎல் எந்த வீரரும் விரும்பக்கூடிய மிகப்பெரிய கற்றல் அனுபவம். இதனால் எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நம்முடைய ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் ஐபிஎல்-க்கு வரவேண்டும் என நினைக்கிறேன். ஐபிஎல் அனுபவம் வெஸ்ட் இண்டீஸ் போன்ற நிலைமைகளில் கைக்கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "தென்னாப்பிரிக்காவில் வைத்து எங்கள் அணியை இந்தியா வீழ்த்துவது கடினம்" - ஜாக் காலிஸ் கருத்து !