Sports

“பாகிஸ்தானை அவமானபடுத்துகிறார்” - இந்திய அணி பற்றி அவதூறு பரப்பிய பாக். வீரரை விமர்சித்த வாசிம் அக்ரம் !

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. இதனை காரணமாக இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஆனால், இந்திய அணியின் இந்த சாதனையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பலரும் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராசா என்பவர், இந்த தொடரில் ஐசிசி இந்தியாவுக்கு வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து உதவி செய்கிறது என்ற கருத்து ஒன்றை கூறி அதிரவைத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "இந்தியாவின் பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்துகளில் அதிக ஸ்விங் மற்றும் சீம் கிடைக்கிறது. ஐசிசி இந்தியாவுக்கு வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து உதவி செய்கிறது. அல்லது பிசிசிஐ தனது வீரர்களுக்கு உதவிவருகிறது என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரமும் ஹசன் ராஸாவின் கருத்தை கண்டித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ”கடந்த இரண்டு நாள்களாக நான் இதைப் பற்றிப் படித்து வருகிறேன். ஹசன் ராஸா சிறிதும் யோசனையின்றி பேசியிருக்கிறார்.ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் பேசுவதெல்லாம் கேட்பதற்கு வேண்டுமானால் சிரிப்பாக இருக்கலாம்.

இது போன்ற கருத்துக்களை சொல்வதன் மூலம் உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்கிறீர்கள். மைதானத்தில் நடுவர்கள் , பார்வையாளர்கள் என பல பேர் இருக்கும் போது இவ்வாறு இப்படி செய்ய முடியும். பந்தை நன்றாக ஸ்விங் செய்ய வைக்கும்படி எந்த ஒரு தொழில்நுட்பமும் இதுவரை வரவில்லை. இந்திய பவுலர்கள் தற்போது உலகத்திலே சிறந்து விளங்குகிறார்கள். அவர்களிடம் திறமை இருக்கிறது. இதனால் தான் அவர்கள் மற்ற பவுலர்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்இப்படித் தவறான குற்றச்சாட்டை முன்வைத்து தன்னைச் சங்கடப்படுத்திக் கொள்வதோடு பாகிஸ்தானையும் உலகத்திற்கு முன்னால் அவமானப்படுத்துகிறார்” என்று விமர்சித்துள்ளார்.

Also Read: "நாங்கள் மட்டும் லாக் டவுனில் இருப்பதே எங்களுக்கு பின்னடைவு" - தோல்விக்கு புதிய காரணம் கூறிய பாகிஸ்தான் !