Sports

"சஹாலுக்கு உலகக்கோப்பை அணியிலும் இடம்கிடைக்காது" - காரணத்தை கூறிய முன்னாள் வீரர் !

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானது. அதில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது சர்சையானது.

அதனைத் தொடர்ந்து இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம்வழங்கப்படவில்லை. இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டாலும் இரு டி20 உலகக்கோப்பையில் தனது இடத்தை இழந்தார். இவரின் இடத்தை வருண் சக்ரவர்த்தி மற்றும் அஸ்வின் ஆகியோர் பிடித்திருந்தனர். அதே போல இவரின் இடம் தற்போது அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத யுஸ்வேந்திர சாஹலுக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் கிடைக்காது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், "இந்திய அணி அதிகமான ஆல் ரவுண்டர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர் போன்றோரால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே வேறு வழியின்றி யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படும். எனவே ஆசிய கோபபி தொடரை போன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்காது என்றே கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: உலகக்கோப்பை வென்ற வீராங்கனையின் உதட்டில் முத்தம்.. மன்னிப்பு கோரிய கால்பந்து சங்க தலைவர்.. நடந்தது என்ன ?