Sports

"உலகக்கோப்பையில் இந்திய அணியில் பலமே அதன் பலவீனமாக மாறும்" -பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கருத்து !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதன்படி இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், பல்வேறு முன்னணி வீரர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் பலமே இதன் பலவீனமாக மாறும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், " இந்த உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அந்த அணியில் சிறப்பாக வீசும் முகமது ஷமி இருக்கிறார். அதே போல பும்ரா நல்ல தகுதியோடு இருப்பது அந்த அணிக்கு முக்யமாகும். அது தவிர அந்த அணியிடம் நல்ல சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்.

ஆனால், சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு அதிக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். 2011 உலகக்கோப்பையை வென்றதால் இந்த தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என்ற மிகப்பெரிய அழுத்தம் வீரர்களுக்கு இருக்கும். பாகிஸ்தான் அணிக்கும் அதே நிலைமை தான். ஒருவேளை சொந்த மண்ணில் விளையாடினாலும் பாகிஸ்தான் மீதும் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : புள்ளிப்பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம்.. முழு விவரம் என்ன ?