Sports
ரஹானே துணை கேப்டனா? அப்போ தொடர்ந்து சிறப்பாக ஆடும் ஜடேஜா? - தேர்வுக்குழுவின் முடிவால் கங்குலி அதிருப்தி !
இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீராக வலம்வந்த ரஹானே ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர் என முத்திரை குத்தப்பட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக வலம்வந்தார். மேலும், அணியின் துணை கேப்டனாகவும் வெற்றிகரமாக செயல்பட்டார்.
அதோடு கோலி இல்லாத தருணங்களில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணிக்கு முக்கிய வெற்றிகளையும் பெற்றுத்தந்தார். அதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்கு அவர் பெற்றுத்தந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஆனால்,அதன்பின்னர் மோசமான பார்ம் காரணமாக ரஹானே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இனி அவர் அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என சொல்லப்பட்ட நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு , அந்த தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக ரஹானே திகழ்ந்தார். மும்பை அணிக்கு எதிரான 19 பந்துகளில் அதிரடி அரைசதம் அடித்த ரஹானே கொல்கத்தா அணிக்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசி ஆட்டநாகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே நடந்துமுடிந்த சையது முஸ்தக் அலி டி20 தொடரில் 5 போட்டிகளில் கிட்டத்தட்ட 110 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் நடந்த ரஞ்சிக்கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். அதோடு இது போன்ற சிறப்பான செயல்பாடு காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியிலும் இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஹானே டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதற்கு இந்திய முன்னாள் வீரர் கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்," ரஹானே டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை நான் பின்னோக்கிய நகர்வாக கருதவில்லை. ஆனால், 18 மாதங்களாக அணிக்காக விளையாடாமல் இருந்த ஒருவர், ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடிய நிலையில் துணை கேப்டனாக நியமித்துள்ளனர். இதற்கு பின்னால் உள்ள சிந்தனை செயல்முறையை புரிந்து கொள்ள முடியவில்லை.
அணியில் ரவீந்திர ஜடேஜா உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலமாக உறுதியாக செயல்பட்டு வருகிறார். அவர்தான் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டியவர். ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்து உடனடியாக துணை கேப்டனாக மாறுவது என்பது எனக்குப் புரியவில்லை. வீரர்கள் தேர்வில் தொடர்ச்சியும், நிலைத்தன்மையும் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்வதற்கு காரணம் என்ன? : உண்மையை எடுத்துச் சொல்லும் முரசொலி தலையங்கம்!
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!