Sports

இந்திய பெண்ணோடு காதல், திருமணம்.. விரைவில் இந்திய ரஞ்சி அணியில் ஆடவுள்ள இங்கிலாந்து வீரர்.. யார் அவர் ?

இங்கிலாந்தில் பிறந்த தாமஸ் ஜோன்ஸ் என்பவர் அங்குள்ள யார்க்‌ஷயர், துர்ஹாம் போன்ற முக்கிய லோக்கல் அணிகளில் லெக்ஸ் ஸ்பின்னராக களமிறங்கி பல்வேறு போட்டிகளில் ஆடியுள்ளார். பின்னர் பெரிய அளவிலான வாய்ப்புகளுக்காக ஸ்காட்லாந்து நாட்டுக்காக தற்போது விளையாடி வருகிறார்.

இவர் மீது இங்கிலாந்தில் வசித்துவரும் குஜராத் பெண் ஒருவர் காதல் கொண்டு தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். இந்த காதலை தாமஸ் ஜோன்ஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தொடர்ந்து இவர் தனது மனைவியோடு இந்தியாவுக்கு வந்து இங்கு தனது கிரிக்கெட் வாழ்வை தொடர முடிவு செய்துள்ளார்.

அதன்பின்னர் இந்திய அணியின் முன்னாள் வீரரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆஷிஷ் நெக்ராவை சந்தித்து பேசிய அவர் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் நெட் பந்து வீச்சாளராகவும் இணைந்துள்ளார்.

உயரமான பந்துவீச்சாளராக இருப்பதால் இவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கவனிக்கத்தக்க வீரராக மாறியுள்ளார். மேலும், இவர் குஜராத் கிரிக்கெட் சங்கத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இதன் காரணமாக விரைவில் குஜராத் ரஞ்சி அணியில் இணைவார் என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் பந்துவீச்சாளராக இவரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முன்னணி வீரர்கள் கூட தடுமாறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை தான் தனக்கு பிடித்த அணி என்றும் மைக்கேல் ஹசியை தான் பிடித்த வீரர் என்றும் தாமஸ் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

Also Read: அடுத்த இங்கிலாந்து வீரரும் அவுட்.. IPL அணிகளின் வலையில் தொடர்ந்து சிக்கும் இங்கிலாந்து வீரர்கள் !