Sports

சென்னையில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்.. உலகக்கோப்பை தொடர் குறித்து வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம் !

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

அதோடு அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்,இந்தியாவில் நடைபெறூம் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், பாகிஸ்தான் உலகக்கோப்பைக்கு வரவில்லை என்றால் அதன் நிதிஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதோடு அந்த நாட்டுக்கு ஐசிசி சார்பில் அளிக்கப்படும் உதவிகளும் நிறுத்தப்படும் என்பதால் பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் கலந்துகொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்தால் அந்த அணி ஆடும் பெரும்பாலான போட்டிகள் சென்னையில் நடைபெறும் என தகவல் வெளிகியாகியுள்ளது. பாதுகாப்பு பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் அணி தனது விருப்ப மைதானங்களாக சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை குறிப்பிட்டுள்ளது என்றும், இதனால் அந்த அணி பங்கேற்கும் போட்டிகள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்தியா பாகிஸ்தான் மோதலும் சென்னையில் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: "இந்த இந்திய வீரர் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தப் போகிறார்"- இளம்வீரரை புகழ்ந்த மாத்யூ ஹைடன்!