Sports

சென்னை மட்டுமல்ல, மும்பையும் தோனியின் கோட்டைதான்.. "We Want Dhoni" என்று ஆர்ப்பரித்த ரசிகர்கள் !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக ஆரம்பித்தாலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சூரியகுமார் யாதவ், காமெரூன் கிரீன், அர்ஷத் கான் ஆகியோரும் வந்தவேகத்தில் திரும்ப ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது.

திலக் வர்மா, இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட், ஷூகீன் ஆகியோரின் சிறிய கேமியோ காரணமாக மோசமான நிலையில் இருந்து மும்பை அணி 157-8 என்ற போராடும் இலக்கை எட்டியது. பின்னர் ஆடிய சென்னை அணியில் கான்வே முதல் ஒவரிலேயே டக் அவுட் ஆக அடுத்து வந்த மூத்த வீரர் ரஹானே மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் விளாசிஅசத்தினார்.

வெறும் 19 பந்துகள் அரைசதமடித்த ரஹானே 27 பந்துகளில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ருத்துராஜ் ஷிவம் துபே ஆகியோர் நிதானமாக ஆடினர். 28 ரன்களில் துபே வெளியேற, ராயுடுவும் கெய்க்வாட்டும் கடைசிவரை நின்று அணியை வெற்றிபெற வைத்தனர்.

இந்த போட்டியின்போது சென்னை அணி 151 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென எம்எஸ் தோனி பேடை கட்டி காட்சி பெரிய டிவியில் ஒளிபரப்பானது. இதனால் அடுத்து தோனிதான் ஆட வருவார் என வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "We Want Dhoni" என்று ஆர்ப்பரித்தனர்.

இதன் காரணமாக அந்த தருணத்தில் போட்டி நடப்பது மும்பையிலா அல்லது சென்னையிலா என சந்தேகம் எழுந்தது. அந்த அளவு மைதானம் முழுக்க "We Want Dhoni" என்ற குரல் எதிரொலித்தது. மும்பை ரசிகர்களுக்காக தனியே அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் கூட "We Want Dhoni" என்ற குரல் எதிரொலித்தது. இதனை குறிப்பிட்டு சென்னை சேப்பாக் மட்டுமல்ல இந்தியாவில் எங்கு சென்றதிலும் அது தோனியின் கோட்டைதான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: ரொனால்டோவின் சாதனை முறியடிப்பு.. ஐரோப்பிய கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரரான மெஸ்ஸி !