Sports

மகளிர் ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி.. பரபரப்பான இறுதிப்போட்டியில் நடந்தது என்ன ?

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

அதைத் தொடர்ந்து ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு இந்தாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.

இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில்,புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த டெல்லி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மேலும், மும்பை அணி இரண்டாம் இடம் பிடித்த நிலையில், அந்த அணியும் மூன்றாம் இடம் பிடித்த உ.பி அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அதே நேரம் பட்டியலில் 4ம் இடம் பிடித்த பெங்களூரு அணியும், கடைசி இடம் பிடித்த குஜராத் அணியும் தொடரில் இருந்து வெளியேறின.

பிளே ஆஃப் சுற்றில் மும்பை அணி உ.பி அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது.

புல் டாஸ் பந்தில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி அங்கிருந்து சரிவை சந்தித்து ஒருகட்டத்தில் 73 ரன்களுக்கு 3 விக்கெட்டுங்களை எடுத்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால், அங்கிருந்து சரிவை சந்தித்து மீண்டும் 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கடைசி விக்கெட்டுக்கு ராதா யாதவ்- ஷிகா பாண்டே ஜோடி 24 பந்துகளுக்கு 52 ரன்கள் குவித்து அசத்தியது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்தது.

பின்னர் 132 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி, முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீட் சிங் மற்றும் ஸ்கிவர் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை வெற்றியிற் நோக்கி அழைத்துச்சென்றனர். பின்னர் 37 ரன்களுக்கு ஹர்மன்ப்ரீட் ஆட்டமிழந்த நிலையில், ஸ்கிவர் எமிலியா கர் ஆகியோர் நிலைத்து ஆடி கடைசி ஓவரில் அணியை வெற்றிபெற வைத்தனர். ஸ்கிவர் 60 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இதன்மூலம் மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் கோப்பையை மும்பை அணி தட்டிச்சென்றது. ஆட்டநாயகியாக ஸ்கிவரும் தொடரின் நாயகியாக மும்பை வீராங்கனை ஹய்லி மாத்தியூஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Also Read: அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்.. உலகச்சாதனை படைத்த ரொனால்டோ.. கொண்டாடும் ரசிகர்கள் !