Sports

தொப்பியை எடுத்து ரசிகரை தாக்கிய ஷகீப் அல் ஹசன்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி.. பின்னணி என்ன ?

வங்காளதேசத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகீப் அல் ஹசன். உலகின் தலைசிறந்த ஆல் ரௌண்டர்களில் ஒருவராக கருதப்படும் இவர் ஐ.பி.எல் தொடரிலும் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் சர்ச்சையில் சிக்கினார்.

2018-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது ஊழல் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிடத் தவறியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதன்பின்னர் 2019-ம் ஆண்டில் ஐசிசியின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஷகீப் அல் ஹசன் ஏற்றுக்கொண்டதால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒரு வருடத்துக்கு அவர் தடை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 'Betwinner News' என்ற சூதாட்ட நிறுவனத்துடன் பிராண்ட் அம்பாஸிடர், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகச் ஷகீப் அல் ஹசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து ஷகீப் அல் ஹசனுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், தற்போது ஷகீப் அல் ஹசன் மற்றொறு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு நிகழ்ச்சிக்கான ப்ரோமோஷன் நிகழ்வுக்கு சென்ற ஷகீப் அல் ஹசனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ரசிகர்கள் அவரை நெருக்கிய நிலையில், சிலர் அவருடன் செல்பி எடுக்க முயன்றனர்.

அப்போது, ரசிகர் ஒருவர் ஷகீப் அல் ஹசனின் தொப்பியை எடுத்தார். இதனால் கோபமடைந்த ஷகீப் அல் ஹசன் ரசிகரின் கையில் இருந்த தொப்பியை பறித்ததோடு, அந்த ரசிகரை மூன்று முறை தாக்கினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்த நிலையில், தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் பேட்ஸ்மேன்கள்.. இந்திய அணி படைத்த அரிய சாதனை என்ன தெரியுமா ?