Sports

வர்ணனையாளர் டு பிளேயர்.. DY பாட்டில் கோப்பையில் 38 பந்தில் 75 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக் !

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், அணியில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டம் காரணமாக டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டதால் தற்போது இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.

இந்த போட்டி முடிவடைந்த நிலையில், தினேஷ் கார்த்திக் மும்பையில் நடைபெறும் கார்ப்பரேட் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்கும் டி.ஒய்.பாட்டில் கோப்பையில் DY Patil Group B அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், 38 பந்துகளில் 75 ரன்களை 197.37 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அசத்தினார்.

அவரின் அதிரடி காரணமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. பின்னர் அந்த இலக்கை விரட்டிய ஆர்பிஐ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் தனது அதிரடியை தொடர்ந்து வருவது அவர் இடம்பெற்றுள்ள பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.