Sports

"அந்த பையனுக்கு சுயநலமே இல்லை, இந்தியாவுக்கு அவன்தான் தேவை" -இளம்வீரரை கைகாட்டிய தினேஷ் கார்த்திக் !

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் மிகசிறந்த இந்திய வீரர் ஒருவரை அடையாளம் காட்டும். அதில் பலர் இந்திய அணிக்காக ஜொலித்துள்ளனர். கே.எல்.ராகுல், பும்ரா போன்ற தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரின் அடையாளம்தான்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் அடையாளம் காட்டிய வீரர் தான் ராகுல் திரிபாதி. ஹைதராபாத் அணிக்கு மிகவும் முக்கியமான 3-வது இடத்தில் ஆடிய அவர் பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். இந்திய அணியின் முனாள் ஓப்பனர் விரேந்திர சேவாக் கூட இந்த சீசனின் சிறந்த நம்பர் 3 பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி தான் என்று அவரை பாராட்டி தள்ளியிருந்தார்.

கடந்த சீசன்களில் கொல்கத்தா அணிக்காகவும் புனே அணிக்காகவுமே கூட மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணமாக ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியின் கதவுகள் திறக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமாகிய அவர் 5 போட்டிகள் மட்டுமே ஆடி 144.78 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட ராகுல் திரிபாதி தொடக்க ஓவர்களில் இந்தியா ரன்குவிக்க தடுமாறிய வேளையில் அதிரடியாக 22 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 44 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்னாள் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் சுயநலமின்றி அதிரடி ஆட்டம் ஆடினார். அவரின் இந்த அதிரடி ஆட்டத்தை சுப்மன் கில்லின் அதிரடி சதத்துக்கு மத்தியிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தன் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அணிக்காக சுயநலம் இல்லாமல் விளையாடும் ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் முன்னுரிமை தரவேண்டும் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ராகுல் திரிபாதி இந்திய டி20 அணியில் மூன்றாவது இடத்திற்கு தகுதியானவர். விராட் கோலி விளையாடாவிட்டால் அவருக்குத்தான் அந்த இடத்திற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். அவர் தன்னலமற்ற முறையில் அணிக்காக இயங்குகிறார். ஐசிசி போட்டிகளில் இந்திய அணிக்கு இப்படியான வீரர்கள்தான் தேவை.

”ராகுல் திரிபாதி அடித்த 30 மற்றும் 40 ரன்களை எடுத்து பார்த்தால் அவர் எத்தனை முக்கியமான வீரர் என்பது தெரியும். அவர் ஒவ்வொரு முறையும் மிகவும் சிக்கலான நேரத்தில் தைரியமான முறையில் ரன்களை அடித்துள்ளார். அவர் தன் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அணிக்காக சுயநலம் இல்லாமல் விளையாடி வருகிறார்" என்று கூறியுள்ளார்.

Also Read: "BC பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்" - நாடாளுமன்றத்தில் திமுக MP மசோதா தாக்கல்!