Sports
"இதை பார்த்தால் டி காக் IPL தொடரிலிருந்தே விலகிவிடுவார்" -தென்னாப்பிரிக்க வீரரை கலாய்த்த கெளதம் கம்பீர் !
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே குவித்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது.
6 ஒவரில் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்தியா அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது களத்துக்கு வந்த வாஷிங்டன் சுந்தர் சூரியகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை குவித்து வந்தார்.
அப்போது சூரியகுமார் செய்த தவறால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பரிதாபமாக ரன்அவுட் செய்யப்பட்டார். பின்னர் சூரியகுமார் -ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்த அணியை இறுதிஓவரில் வெற்றிபெற வைத்தனர்.
ஆடுகளத்தில் கடின தன்மை காரணமாக இந்த போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாத நிலையில், பந்து சுழன்று எழும்பி பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதனால் பந்துகளை கணிக்க பேட்ஸ்மேன்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த மைதானம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, " இந்த மைதானம் டி20 போட்டிக்கு உகந்தது அல்ல, உண்மையைச் சொல்லப் போனால், இது அதிரவைக்கும் விக்கெட்டாக இருந்தது. பந்துகள் அதிகமாகச் சுழன்று வந்ததால் நல்ல வாய்ப்பை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த மைதானத்தை குறித்து போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த கெளதம் கம்பிர் கூறிய கருத்து தற்போது வைரலாகியுள்ளது. போட்டியின்போது பேசிய அவர், "இது டி20 ஆடுகளமே அல்ல. இதுபோன்ற ஆடுகளத்தைப் பார்த்தால் லக்னோ சூப்பர் ஜெயேன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள குயின்டான் டி காக் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் இருந்தே விலகிவிடுவார்" என்று விமர்சித்தார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பிர் செயல்பட்டு வரும் நிலையில் தென்னாபிரிக்க வீரர் டி காக் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லக்னோ அணியின் சொந்த மைதானமும் போட்டி நடைபெற்ற இதே மைதானம்தான். .
Also Read
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!
-
"இனி என்னிடம் ஆலோசனை கேட்காதே" - ருத்துராஜிடம் கூறிய தோனி... பத்தினாத் வெளியிட்ட தகவல் !