Sports

#IPL2023Auction | கழட்டி விட்ட பஞ்சாப்.. ரூ.8.25 கோடிக்கு மயங்க் அகர்வாலை ஏலம் எடுத்த அணி எது தெரியுமா?

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை ஒட்டி 10 அணிகளும் தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை விடுவித்தனர்.

இதனால் 10 அணிகளிலும் 87 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து இந்த இடங்களை நிரப்புவதற்காக இன்று கேரளாவில் உள்ள கொச்சியில் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த 87 இடங்களுக்கு கிட்டத்தட்ட 405 வீரர்கள் போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில் ஐ.பி.எல் ஏலம் தொடங்கி நடைபெற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏலம் தொடங்கிய உடனே கேன் வில்லியம்சனை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது. கடந்த சீசனில் ரூ.16 கோடிக்கு கேன் வில்லியம்சன் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாக மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. கடந்த முறை அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இவர் சிறப்பாக விளையாடவில்லை என கூறி அவர் பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.

அதேபோல், அஜிங்யா ரஹானேவை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மேலும் ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இங்கிலாந்து வீரர் சாம் கரணை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

Also Read: 'தங்கள் வேலை முடிந்தவுடன் கைக்கழுவி விடுகிறார்கள்' : பஞ்சாப் அணி நிர்வாகத்தை சாடிய முன்னாள் வீரர்!