Sports
கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா -பிரான்ஸ் அணிகள் மோதல்.. தோற்றும் பாராட்டை அள்ளும் மொரோக்கோ !
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றுடன் 16 அணிகள் வெளியேறிய நிலையில், ‘ரவுண்டு ஆப் 16’ மற்றும் காலிறுதியுடன் பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்பட பல முன்னணி அணிகள் வெளியேறிவிட்டன.
நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும், முதல் முறை சாம்பியன் கனவில் குரோஷியா, மொராக்கோ அணிகள் அரையிறுதியில் களம் இறங்கின. முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதனைத் தொடர்ந்து நேற்று பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதின. இதில் போட்டி தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீரர் தியோ கோல் அடித்து அசத்தினார். இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
காயம் காரணமாக தங்கள் முக்கிய வீரர்களை மொராக்கோ இழந்துஇருந்தாலும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை ஆடியது. ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் பந்து மொரோக்கோ வசமே இருந்தது. ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் மொராக்கோவுக்கு கிடைக்கவேண்டிய பெனால்டியை நடுவர் மறுத்த நிலையில் அது சர்ச்சையானது. பல்வேறு தரப்பினரும் அது நிச்சயம் பெனால்டி கொடுக்கவேண்டிய தவறு என பதிவிட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்தும் மொராக்கோ பல்வேறு சந்தர்ப்பங்களை தொடர்ந்து உருவாக்கியது. எனினும் அந்த அணியால் கோல் ஏதும் அடிக்கமுடியவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் மொரோக்கோ வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வாய்ப்புகளை உருவாக்கினாலும் அது ஏதும் கோலாகவில்லை.
இதனிடையே ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய முவானி பிரான்ஸ் அணிக்காக மற்றொரு கோல் அடித்து ஏறத்தால தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொரோக்கோ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 18-ம் தேதி நடக்கும் இறுதிபோட்யில் பிரான்ஸ் அணி அர்ஜென்டினா அணியை சந்திக்கவுள்ளது.
இந்த தொடரில் யாரும் எதிர்பாராத அணியாக இருந்த மொரோக்கோ வலுவான பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல் அணிகளை வீழ்த்தி வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணியாக சாதனை படைத்தது. அரையிறுதியில் தோல்வியைத் தழுவினாலும் அனைத்து தரப்பினரும் அந்த அணியின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!