Sports

அடுத்தாண்டு IPL தொடரில் அறிமுகமாகும் 'Impact Player' முறை.. புதிய விதியால் அணிக்கு கிடைக்கும் லாபம் என்ன?

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அடுத்த ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பிசிசிஐ புதிய விதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்பாக்ட் பிளேயர் என்ற முறையை பிசிசிஐ அறிமுகப்படுத்த விரும்புகிறது. அதில் பங்கேற்கும் அணிகள் டி20 போட்டியின் போது விளையாடும் லெவனில் ஒரு உறுப்பினரை ஆட்டத்தின் சூழலின் அடிப்படையில் மாற்றலாம்"என்று கூறியுள்ளது. இதற்கு முன்னதாக பிசிசிஐ சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அறிமுகப்படுத்தியது. அதில் டெல்லி அணி இந்த விதியை பயன்படுத்தி ஹிருத்திக் ஷோக்கீன் என்ற வீரரை களமிறக்கியது.

இம்பாக்ட் பிளேயர் என்ற முறை"முதல்முதலாக ஆஸ்திரேலிய லீக் தொடரான பிக் பேஷ் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு அந்த விதிமுறை பெரும் வெற்றியை பெற்றதால் தற்போது பிசிசிஐ-யும் ஐபிஎல் தொடரில் இதனை அறிமுகப்படத்தவுள்ளது.

இந்த முறையின்படி அணி ஆடும் தனது 11 வீரர்கள் பட்டியலை அறிவிக்கும்போதே வீரராக இம்பாக்ட் பிளேயர்கள் கொண்ட பட்டியலையும் அறிவிக்கவேண்டும். ஆட்டத்தின் 14-வது ஓவருக்கு முன்னர் ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் உள்ள ஒருவரை நீக்கிவிட்டு இம்பாக்ட் பிளேயர்கள் பட்டியலில் உள்ள ஒரு வீரரை களமிறக்கலாம். அதே நேரம் இம்பாக்ட் பிளேயர் அறிமுகப்படுதத்ப்பட்ட பின்னர் நீக்கப்பட்ட வீரரை மீண்டும் அணியில் களமிறக்கமுடியாது. இந்த முறை காரணமாக ஐபிஎல் தொடர் இன்னும் சுவாரசியமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read: இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?