Sports

ஹிஜாபை அகற்றி புகைப்படம் வெளியீடு.. ஈரான் பெண்கள் கூடைப்பந்து அணிக்கு குவியும் பாராட்டு.. பின்னணி என்ன ?

கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி என்ற பேட்டரில் ஈரானில் நிலவிவந்த முகமது ரிசா ஷா ஆட்சியை அகற்றி ருஹல்லா அலி கொமேனி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தது. அதன் பின்னர் மதவாத அடக்குமுறைகள் அதிகரித்தன.

பெண்கள் முக்காடு அணியவேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமீபத்தில் பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு அரசால் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் தீவிரமான கண்காணிக்கப்பட்டனர். இந்த சிறப்பு பிரிவு படையினரால் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார்.

சிறையில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆட்சிக்கு எதிராக பெண்கள் கொதித்தெழுந்தனர். முக்கிய நகரங்களில் பெண்கள் வெளிப்படையாகவே ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடிகளை அறுத்து எறிந்தனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அரச படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொடூரமாக தாக்கும் ஈரான் அரசுக்கு பல்வேறு நாடுகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அங்கு அரச அடக்குமுறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாடு தழுவிய அளவில் அங்கு போராட்டம் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

அதைத் தொடர்ந்து இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் போராட்டத்துக்கு ஆதரவாக ஈரான் அணி வீரர்கள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாடாமல் ஈரான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஈரான் பெண்கள் கூடைப்பந்து அணியினர் தங்கள் ஹிஜாபை அகற்றி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரானின் பெண்கள் கூடைப்பந்து அணி சார்பில் இது தொடர்பான புகைப்படம் அவர்களின் சமூகவலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படம், ‘பெண் வாழ்க்கை சுதந்திரம்’ என்று தலையிடப்பட்ட வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்.. ஒன்றரை கிலோ எடை இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி !