Sports

குடிப்பழக்கத்தால் வாழ்நாள் தடை..மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் காலமானார் !

கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி உச்சத்தில் இருந்து 70-களில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் டேவிட் முர்ரே. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 1973 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகமானார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், அந்த காலத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தனது கேட்ச் திறமையால் பாராட்டப்பட்ட இவர் பெரிய விளையாட்டு வீரராக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப ஆரம்பத்தில் ஜொலித்தவர் தனது தவறான பழக்கத்தால் தன் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டார்.

குடி பழக்கத்துக்கு ஆளான இவர் பயிற்சியின்போதே குடித்துக்கொண்டு வந்ததாக விமர்சனம் எழுந்தது. அதுதவிர பொதுஇடங்களில் மதுப்பழக்கத்தால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதன் காரணமாக 1975- 76 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

இவர் மீது மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்த நிலையில், பின்னர் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால் 1978 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கிந்திய கிரிக்கெட் அணி வந்தபோது இங்கும் சர்ச்சையில் சிக்கினார். இது போன்ற காரணங்களால் 1983 ஆம் ஆண்டு, மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

இந்த நிலையில், டேவிட் முர்ரே தனது வீட்டின் முன்பு மயங்கி விழுந்து காலமானதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மேற்கிந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டேவிட் முர்ரேவின் மகன் ரிக்கி ஹொய்டியும் மேற்கிந்திய அணியில் விக்கெட் கீப்பராக சில போட்டிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அர்ஜென்டினா அணியை தனியொருவனாக தலையில் சுமக்கும் மெஸ்ஸி.. #ARGvsMEX போட்டியில் நடந்தது என்ன ?