Sports

#FIFA2022 :உலகக்கோப்பையை நேரலையில் பார்க்க தனி வீட்டையே வாங்கிய கேரள ரசிகர்கள் ! viral புகைப்படம் !

கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கியுள்ளார். ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் அனைத்து மூலைகளிலும் கால்பந்து பரவியிருப்பதால் இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் உலக அளவில் கவனிக்கப்படும். கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கின்றன. இதன் காரணமாக ஒலிம்பிக் தொடருக்கு பிறகு உலகளவில் அதிகம் எதிர்நோக்கபடும் தொடராக கால்பந்து உலகக்கோப்பை இருந்து வருகிறது.

இந்தியா கால்பந்து அரங்கில் உலகளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் அதிகம் எதிர்நோக்கப்படும் தொடராக கால்பந்து உலகக்கோப்பை இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலம், கோவா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் கிரிக்கெட்டை விட அதிகம் வரவேற்பு பெரும் விளையாட்டாக கால்பந்து தொடர் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த கால்பந்து வெறியர்கள் உலககோப்பை கால்பந்து தொடரை பார்க்க தனியாக வீடு ஒன்று வாங்கியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் உள்ள முண்டக்காமுகல் கிராமத்தை சேர்ந்த 17 கால்பந்து ரசிகர்கள் கால்பந்து உலகக்கோப்பையை நேரலையில் பார்க்க 23 லட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர்.

இதில் பெரிய திரை அமைத்து அதன்மூலம் அனைவரும் ஒரே இடத்தில் கூடி உலகக்கோப்பை தொடரை பார்க்கும்வண்ணமாக வீட்டை மாற்றியமைத்துள்ளனர். வீட்டில் பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் நிறங்களையும் வண்ணமாக பூசி, கால்பந்து ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோரின் ஓவியத்தையும் அதில் வரைந்துள்ளனர்

மேலும், வீட்டிற்குள் பல்வேறு கால்பந்து நட்சத்திரங்களின் கட்அவுட்களையும் நிறுவிய அவர்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கொடிகளால் வீட்டை அலங்கரித்துள்ளனர். அவரின் இந்த செயல் ஊடகங்களில் வெளியான நிலையில், அது வைரலாகியுள்ளது. கால்பந்து ரசிகர்களின் இந்த செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 49 பந்துகளில் அதிரடி சதம்.. T20 போட்டிகளில் சூரியகுமார் படைத்த அரிய சாதனை.. பாராட்டித்தள்ளும் ரசிகர்கள் !