Sports

வெளியேற தடை.. கையில் Location Tracker.. இலங்கை வீரருக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் !

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய சாம்பியன் இலங்கை அணி தகுதி சுற்றின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

எனினும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. என்னினும் சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் ஆடிய அந்த அணி அந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டி முடிந்ததற்கு பின்னர் இலங்கை அணி நாடு திருப்ப இருந்த நிலையில், பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவை ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக கைது செய்தது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பெண்ணுடன் தனுஷ்கா டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகிய நிலையில், கடந்த வாரம் சிட்னியில் உள்ள குடியிருப்பில் அந்த பெண்ணை தனுஷ்க குணதிலகா சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் சிட்னி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தனுஷ்க குணதிலகா கைது செய்யப்பட்டதாக சிட்னி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குற்றச்சாட்டுக்கு ஆளான தனுஷ்க குணதிலகா அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான தனுஷ்க குணதிலகாவுக்கு பிணை வழங்கி ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு 1,50,000 டாலர் பிணை வழங்குவதற்கும் அவர் நாட்டை விட்டு வெளியேறாததை உறுதிசெய்வதற்காக கண்காணிப்பு வளையல் அணிவதற்கும் ஒப்புக்கொண்டதையடுத்துல் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தினமும் காவல்துறையில் கையொப்பமிட வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் செல்லக்கூடாது. அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விஜய் ஹசாரே தொடரில் சதமடித்து தெறிக்க விடும் தமிழ்நாடு ஓபனர்கள்.. இப்போதே குறிவைக்கும் IPL அணிகள் !