Sports

"STADIUM இருந்தாதானே கலவரம் செய்வீர்கள்.. இடித்து விடுகிறோம்" -வன்முறை நடத்த ஸ்டேடியத்தை இடிக்க உத்தரவு !

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் அரேமா FC அணியும் பெர்செபயா அணியும் மோதின. பரம வைரிகள் மோதும் இந்த ஆட்டத்துக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்த நிலையில், இந்த போட்டியில் பெர்செபயா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து ஆவேசமடைந்த அரேமா FC அணியின் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு வன்முறையில் ஈடுபடத்தொடங்கினர். இந்த கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் 127 பேர் பலியான நிலையில், 180க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.இந்த கலவரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கியும், மிதிப்பட்டும் 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 2 காவல்துறையினர் உள்ளிட்ட 93 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உள்ளூர் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த கலவரத்தை போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.இந்த கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த ஸ்டேடியத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த கொரூர செயல் நடக்க முக்கிய காரணம் என விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற கஞ்சுருஹான் கால்பந்து மைதானம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், மலாங்கில் உள்ள கஞ்சுருஹான் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு ஃபிஃபா தரத்தின்படி, வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய முறையான வசதிகளுடன் மீண்டும் கட்ட உள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பீகார் : பிட்பேப்பரை LOVE LETTER என நினைத்து சிறுவன் அடித்துக் கொலை.. மாணவியின் அண்ணன் வெறிச்செயல் !