Sports
"நான் ஏமாற்றமடைந்து விட்டேன்".. இந்திய அணியின் தேர்வுக்குழு மீது குற்றச்சாட்டு வைத்த பிரித்வி ஷா!
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. அதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டாம் கட்ட வீரர்களை களமிறக்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். ஷிகர் தவான் தலைமையிலான இந்த அணியில் சுப்மன் கில், சஞ்சு சாம்சன், இஷன் கிஷன், ரஜாத் பதிதார் போன்ற பேட்ஸ்மேன்களும் ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சஹார், அவேஷ் கான், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் போன்ற பந்துவீச்சாளர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.
இருந்தாலும் இந்தத் தொடருக்கான அணியில் ஒரு பெரிய பெயர் விடுபட்டது - பிரித்வி ஷா. மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்தார் பிரித்வி ஷா. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர், அந்தத் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். கடந்த மாதம் நடந்த அந்தத் தொடரின் முக்கிய போட்டியில் அபாரமாக விளையாடி 77 ரன்கள் விளாசினார். அப்படி இருந்தும் அவருக்கு இந்த இரண்டாம் கட்ட இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒரு பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் பிரித்வி ஷா. "நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். நான் தொடர்ந்து ரன் எடுத்து வருகிறேன். மிகவும் கடினமான உழைத்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பரவாயில்லை. தேசிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்கள் எப்போது நான் தயார் என்று உணர்கிறார்களோ, அப்போது என்னை அணிக்குத் தேர்வு செய்வார்கள். இந்தியா ஏ, இந்திய சீனியர் அணி என எந்த அணிக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அதை சரியாகப் பயன்படுத்தி என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதுமட்டுமல்லாமல் என்னுடைய ஃபிட்னஸையும் சிறப்பாக வைத்திருக்க அனைத்து வகையான முயற்சிகளையும் செய்வேன்" என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பிரித்வி ஷா. அதுமட்டுமல்லாமல், 2022 ஐபிஎல் தொடருக்குப் பிறகு சுமார் 7-8 கிலோ எடை குறைத்திருப்பதாகக் கூறிய ஷா, தன்னுடைய உணவுப் பழக்கத்திலும் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
"என்னுடைய பேட்டிங்கில் வித்தியாசமான விஷயங்களில் நான் அதிகமாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஃபிட்னஸுக்கு அதிக நேரம் செலவு செய்தேன். எடைக் குறைப்பில் அதிக கவனம் செலுத்தியதால், கடந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு மட்டும் சுமார் 7-8 கிலோ வரை குறைந்திருக்கிறேன். என்னுடைய அதிக நேரத்தை ஜிம்மில் கழித்தேன். அதிகமாக ஓடினேன். இனிப்பு வகைகளோ, குளிர்பானங்களோ எதையும் தொடவில்லை. சைனீஸ் வகை உணவுகளை முற்றிலும் தவிர்த்து வருகிறேன்" என்று கூறினார் அவர்.
அடுத்து மும்பை அணிக்காக சையது முஷ்தாக் அலி அணிக்காக விளையாடவிருக்கும் அவர், மும்பை அணி பற்றியும் பேசினார். "அஹமதாபாத்தில் நாங்கள் சில பயிற்சிப் போட்டிகளில் விளையாடினோம். எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறோம். திறமையான பேட்ஸ்மேன்கள், பௌலர்கள், ஆல் ரவுண்டர்கள் கொண்ட அணியாக இருக்கிறது. எங்களுடைய பயிற்சியாளர் குழுவில் எல்லோரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அணியின் அனைத்து வீரர்களுமே பெரிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார் பிரித்வி ஷா.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!