Sports

"விராட் கோலிக்கு இதுதான் சரியான இடம், இந்த இடத்தில்தான் களமிறங்க வேண்டும்"-ஆஸ். முன்னாள் வீரர் ஆருடம் !

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

அதேநேரம் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அறிவித்துள்ளார்.

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி அவர் சதமடித்ததால் அவர் தொடர்ந்து துவக்க வீரராக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் துவக்க வீரர் ராகுல் சற்று சோபித்து வருவதால் இந்த கருத்து வலுத்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கே எல் ராகுல் துவக்க வீரராக செயல்படுவாரா.. மாட்டாரா.. என்ற கேள்வி எழுப்ப வேண்டாம். அப்படி கேள்வி எழுப்பினால் அது ராகுலின் பேட்டிங்கை பாதிக்கும், அதன்பின்னர் அவரால் சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியாது, ஒரு துவக்க வீரராக இதைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். கே எல் ராகுல் இப்படிப்பட்ட நெருக்கடியில் நிச்சயமாக சிறப்பாக செயல்பட முடியாது. இதனால் இந்திய அணியின் பேட்டி ஆர்டரை அப்படியே விட்டு விடுங்கள், விராட் கோலியால் எப்படிப்பட்ட சூழ்நிலையில் சமாளிக்க முடியும் அவர் ஒரு உலக தரமாய்ந்த வீரர். அவர் மூணாவது பேட்டிங் ஆர்டரில் மிகச் சிறப்பாக செயல்படுவார்"என்று கூறியுள்ளார்.

Also Read: குளோனிங் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓநாய்..100 நாட்கள் வாழ்ந்து சாதனை.. பிரமிக்கவைக்கும் உருவாக்கம்!