Sports

"கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும்".. அப்போ ராகுல் ? - முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர் பதில் !

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

அதேநேரம் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அறிவித்துள்ளார்.

விராட் கோலியின் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. இதைத் தொடர்ந்து பல முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் ரோகன் கவாஸ்கர் இந்திய அணியில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என நான் கருதுகிறேன். அவரது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் போன்றவை அதனை தெளிவாக விவரிக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க அவரே விரும்புவதாக சொல்லியதாக எனக்கு நியாபகம் உள்ளது. அது இந்திய அணிக்கும் உதவும்.

அதேபோல மூன்றாவது பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் களம் இறங்க வேண்டும். இது நடக்க வேண்டுமெனில் ராகுல் அதற்கு தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டி உள்ளது." எனக் கூறியுள்ளார்.

Also Read: "இந்திய வீரர்களின் காயத்துக்கு காரணமே இதுதான், அதை பற்றி யாரும் பேசுவதில்லை"- விரேந்திர சேவாக் கருத்து !