Sports

"டி20 உலகக்கோப்பையையில் நிச்சயம் இந்த இளம்வீரர் அணியில் இருக்க வேண்டும்" - ரவி சாஸ்திரி ஆதரவு !

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து மூன்றாவது,நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதன் பின்னர் இந்திய அணி ஜிம்பாப்பே தொடர் பின்னர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ளது.

இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு அக்டோபர் மாதம் துவங்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட இடம் கிடைக்கும். இதற்காக சிறந்த இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய வீரர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய அர்ஸ்தீப் சிங் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாக ஆடிவருகிறார். இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் அர்ஸ்தீப் சிங்கிற்கு நிச்சயம் இடம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சாளர்களின் பங்கு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இடது கை பந்துவீச்சாளர்கள் இதுவரை சிறப்பாக பந்துவீசியுள்ளனர். அங்கு அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சிற்கு சாதகமானதாக இருக்கும். மூன்று வலது கை வேகப்பந்து வீச்சாளருடன், ஒரு இடது கை வேகப்பந்து விச்சாளருக்கும் இடம் கொடுப்பதே இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 8 ஆண்டுகளாக கொடுமை செய்த கணவர்.. வீடியோ வெளியிட்டு அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட இந்திய பெண் !