Sports
“IPL போட்டியில் மரியாதை கிடைக்கவில்லை.. Re-Entry கொடுக்க தயார்? - உண்மையை போட்டுடைத்த கிறிஸ் கெயில்!
கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிக்சர் மழை வந்தாலே உற்சாகம் தான். அப்படி 20 ஓவர் கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸாக தற்போது வரை இருக்கும் ஒருவர் தான் கிறிஸ் கெயில். இதுவரை ஐ.பி.எல்-லில் 2009 முதல் கடந்த 2021 அன்று வரை 3 அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டின் பாதியிலேயே தொடரை விட்டு வெளியேரினார் கிறிஸ் கெயில்.
இந்த வருட மெகா ஏலத்திலும் பங்கேற்கவில்லை. அவர் இல்லை என்பது ஏராளமான ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தாலும் வயதை காரணமாக வைத்து இப்படியொரு முடிவை எடுத்தார் என்று தான் பலர் நினைத்தனர். திடீரென்று ஐ.பி.எல் அணிகள் மேல் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார் கிறிஸ் கெயில்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு ஐ.பி.எல்-லில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த சில வருடங்களாக ஐ.பி.எல் லீக்கில் மரியாதையாக நடத்தப்படவில்லை என்று நான் உணர்ந்தேன். ஐ.பி.எல்-லில் அத்தனை பங்காற்றிய பிறகும் கூட எனக்கு மரியாதை கிடைக்காதது ஏமாற்றமாக அமைந்ததாக கூறினார். அதன் காரணமாகவே மெகா ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்ததாக கூறினார். கிரிக்கெட்டைத் தாண்டி வாழ்க்கை என்ற ஒன்று உள்ளது, எனவே அதற்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இன்னும் ஐபிஎல் அணிகளுக்கு தன்னுடைய தேவை இருப்பதாகவும், கொல்கத்தா, பஞ்சாப் , பெங்களூர் அணிகாளுக்காக விளையாடி உள்ளதையும் தெரிவித்தார், பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் கோப்பையை வெல்லவில்லை என்றும், இந்த இரண்டு அணிகளுக்காக விளையாட விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஐ.பி.எல்-லில் விளையாடுவேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனையடுத்து, “ Chris Gayle Returns" என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் வைரலாக்க தொடங்கிவிட்டனர். ஐ.பி.எல் தொடரைப் பொறுத்தவரை அதிக சதங்கள், தனிநபர் அதிகபட்சம், அதிக சிக்சர் உள்ளிட்ட ஏராளமான பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கிறார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில்.
குற்றச்சாட்டிற்கான காரணம்:
கிட்டதட்ட 2009 முதல் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கிறிஸ் கெயில் எதிரணிகளை சிக்சர் மழையால் திக்குமுக்காட வைத்தது நமாக்கு தெரியும். பேட்டிங்கில் மட்டுமல்லாது, பவுலிங் மற்றும் பீல்டிங்கிலும் அவர் தன் திறமைய நன்றாகவே வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் 2018 இல் பெங்களூர் அணியில் இருந்த அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் காலம் காலமாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அவரை , ஒரு சில குறிப்பிட்ட போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக 3-வது இடத்தில் களமிறக்கியது. அதிலும் குறிப்பாக 2020, 21 -இல் கேப்டனாக பொறுப்பேற்ற கே.எல்.ராகுல் கெயிலுக்கு ஆதரவு கொடுக்காமல் மயங்க் மற்றும் ராகுலே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
மேலும் அதே நேரத்தில் 40 வயதைத் தொட்ட கிறிஸ் கெயில் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை எடுக்கவில்லை எனக் கூறி தொடர்ச்சியாக வாய்ப்பளிக்காமல் பெஞ்சிலும் உட்காரவைக்கப்பட்டார். 2020 இல் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது, இந்தநிலையில் 2021 இன் பாதியிலேயே சரியான மரியாதை கிடைக்காத காரணத்தால் தான் அவர் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட திறமையான கிரிக்கெட் வீரர்களில் பலர் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் வேறு அணிகளில் வாங்கப்பட்டனர். அப்படி வாங்கப்பட்ட பல வீரர்கள் தற்போது நடக்கும் தொடரில் கலக்கிக் கொண்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு யுனிவர்ஸ் பாஸ் ஐ.பி.எல்-இல் களமிறங்குவதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!