Sports
#IPL2022: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த லக்னோ - பேட்டிங் சொதப்பலால் வெற்றியை தவறவிட்ட கொல்கத்தா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் லக்னோ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. லக்னோ அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது அவர்களின் மிரட்டலான பந்துவீச்சே.
ப்ளே ஆஃப்ஸூக்கு செல்ல வேண்டுமெனில் எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற சூழலில் கொல்கத்தா அணியின் முக்கிய வீரரான ரஸல் 'இனிமேல் வரப்போவதெல்லாம் இறுதிப்போட்டியை போன்றதுதான். நாங்களும் அதே மனநிலையில்தான் ஆடப்போகிறோம்' என கூறியிருந்தார். கொல்கத்தா அணி நேற்று பேட்டிங் ஆடிய விதத்தை பார்க்கும்போது 'இப்படித்தான் ஃபைனல்ஸ்ல பேட்டிங் ஆடுவிங்களா சார்...' என்றே கேட்க தோன்றியது. அந்தளவுக்கு மோசமாக பேட்டிங் ஆடியிருந்தனர். முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஒரே மாதிரியாக ஷார்ட் பிட்ச் டெலிவரியிலேயே அவுட் ஆகியிருந்தனர்.
தமிழக வீரரான பாபா இந்திரஜித் கொல்கத்தா அணிக்கு ஓப்பனராக இறங்கியிருந்தார். இது அவருக்கு அவரின் திறனை நிரூபித்து காட்ட கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், இந்திரஜித் அந்த வாய்ப்பை வீணாக்கிவிட்டார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மோஷின் கான் வீசிய முதல் ஓவரிலேயே தட்டுத்தடுமாறி விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் ஓவரின் முதல் 5 பந்துகளையும் டாட் ஆக்கியவர், கடைசியாக வீசப்பட்ட ஒரு வெறித்தனமான ஷார்ட் பிட்ச் டெலிவரியில் பெரிய ஷாட்டுக்கு முயன்று டக் அவுட் ஆகி வெளியேறினார். முதல் ஸ்பெல்லை வீசிய சமீரா, மோஷின் கான் இருவருமே குட் லெந்த் அல்லது ஷார்ட்டாக மட்டுமே வீசிக்கொண்டே இருந்தனர். அந்த டெலிவரிகளுக்கு கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினர். இந்திரஜித்தை தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் சமீரா வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரியில் பெரிய ஷாட் ஆட முயன்று அவுட் ஆகியிருந்தார். இதே பவர்ப்ளேக்குள்ளாக ஃபின்ச்சும் அவுட் ஆகியிருந்தார். அதுவும் ஷார்ட் பிட்ச் டெலிவரிதான். வீசியது ஹோல்டர்.
முதல் 6 ஓவர் பவர்ப்ளேயில் கொல்கத்தா 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள். மூன்றுமே ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களில் வந்தவை. நன்றாக குட் லெந்த்தில் தொடர்ந்து பிட்ச்சாக்கி பேட்ஸ்மேனை செட்டாக்கி திடீரென ஒரு ஷார்ட் பந்தை விசி சர்ப்ரைஸ் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்த ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை கொல்கத்தாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக கவனித்து ஆடியிருக்க வேண்டும்.
ரஸல் 19 பந்துகளில் 45 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 200 க்கும் மேல் இருந்தது. அடித்து வெளுத்திருந்தார். ஆனால், ரஸலின் இந்த அதிரடியால் கூட கொல்கத்தாவை வெல்ல வைக்க முடியவில்லை. கொல்கத்தா 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வென்றது. அந்த ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம்.
Also Read
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!