Sports
23 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு... ஆசிய கோப்பை கால்பந்தில் அசத்தப்போகும் தமிழ்நாட்டு சிங்கப்பெண்கள்!
ஜனவரி 20ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் பெண்களுக்கான AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம்பிடித்திருக்கின்றனர். மணிப்பூருக்கு பிறகு தமிழ்நாடு சார்பிலேயே அதிக வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கின்றனர்.
ஜனவரி 20 முதல் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஈரானுக்கு எதிராகவும் அடுத்தடுத்து சீன தைபே மற்றும் சீனாவிற்கு எதிராகவும் மோதவிருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில்தான் தமிழக வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றனர்.
23 பேர் கொண்ட இந்திய அணியில் மணிப்பூர் சார்பில் 7 வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றனர். அதற்குப் பிறகு அதிகபட்சமாக தமிழ்நாடு சார்பிலேயே 5 வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றனர். சந்தியா, மாரியம்மாள், சௌமியா, இந்துமதி, கார்த்திகா ஆகியோரே அந்த 5 தமிழக வீராங்கனகள் ஆவர்.
சௌமியா கோல் கீப்பராகவும் கார்த்திகா, இந்துமதி ஆகியோர் மிட் ஃபீல்டர்களாகவும் சந்தியா, மாரியம்மாள் ஆகியோர் ஃபார்வர்டு பொசிசனிலும் ஆடக்கூடியவர்கள்.
சமீபகாலமாகவே தமிழ்நாடு கால்பந்து அணியும் தமிழ்நாடு கால்பந்து வீராங்கனைகளும் மிகச்சிறப்பாக ஆடி பல சாதனைகளைச் செய்திருக்கின்றனர். 2017-18 தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த மணிப்பூரை தமிழ்நாடு அணி வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது. தமிழ்நாடு வீராங்கனைகள் சிலரும் இந்திய அணிக்காக தேர்வாகியிருந்தனர். கடந்த மாதம் கேரளாவில் நடந்திருந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பிலும் தமிழ்நாடு அணி நன்றாகவே ஆடியிருந்தது.
மேலும், கடந்த மாதம் பிரேசிலுக்கு சென்றிருந்த இந்திய அணியிலுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி, கார்த்திகா, மாரியம்மாள் மூவரும் இடம்பிடித்திருந்தனர். இந்த நிலையிலேயே இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியிலும் தமிழ்நாடு பெண்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் பின்தங்கிய நிலையிலிருந்து போராடி முன்னேறியே இந்த இடத்தை அடைந்திருக்கின்றனர். இவர்கள் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியதைப் போலவே இந்தியாவையும் பெருமைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.
Also Read
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!