Sports

ஒலிம்பிக் என்றதும் ஒரு செட்டை கூட இழக்காமல் அசத்தல்; இந்தியர்களின் நம்பிக்கையை வீணாக்காத பி.வி.சிந்து!

அரையிறுதி போட்டியில் தாய்-சூ-யிங் கிடம் தோற்றிருந்த நிலையில் இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆடினார் சிந்து.

சீனாவை சேர்ந்த ஹே பிங் ஜியா க்கு எதிரான இந்த போட்டியை 2-0 என நேர் செட் கணக்கில் வென்று சாதனை படைத்திருக்கிறார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் கரோலினா மரினுடன் இறுதிப்போட்டியில் தோற்று வெள்ளி வென்றிருந்தார். இந்த முறை வெண்கலம் வென்றிருக்கிறார். இதன் மூலம்,

இந்தியா சார்பில் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்களில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை எனும் பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் மல்யுத்த வீரரான சுஷில் குமார் 2008 மற்றும் 2012 இல் வெண்கலம், வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்றிருந்தார்.

சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பாக சரியான ஃபார்மில் இல்லை. தன்னை விட தரவரிசையில் பின்னால் இருக்கும் வீராங்கனையிடமெல்லாம் தோற்றிருந்தார். ஆனால், ஒலிம்பிக் என்று வந்தவுடன் அசத்திவிட்டார். முதல் 4 போட்டிகளிலுமே ஒரு செட்டை கூட இழக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வென்றிருந்தார்.

அரையிறுதியில் மட்டுமே கொஞ்சம் தடுமாறியிருந்தார். ஆனால், வெண்கல பதக்கத்திற்கான இன்றைய போட்டியில் மீண்டு வந்து மிரட்டிவிட்டார். தொடர்ந்து மூன்றாவது நாளாக சிந்து ஆடிய மூன்றாவது இது. ஆனால், அவரது ஆட்டத்தில் எந்த அயர்ச்சியுமே தெரியவில்லை. சீன வீராங்கனையை விட ஒவ்வொரு நொடியிலும் சிறப்பாக ஆடியிருந்தார்.

தன்னுடைய பலமான ஸ்மாஷ்கள் மற்றும் இன்-அவுட் மூலம் தொடர்ச்சியாக பாயிண்ட்களை எடுத்தார். அவரது பலவீனமாக கருதப்படும் லாங் ரேலிக்களிலும் இந்த முறை சிறப்பாக ஆடி புள்ளிகளை எடுத்தார். சீன வீராங்கனை சிறப்பான ட்ராப்கள் மூலம் சில புள்ளிகளை எடுத்திருந்தாலும் முழு ஆட்டத்திலும் அவரால் அதை செய்திருக்க முடியவில்லை.

முதல் செட்டை 21-13 என்றும் இரண்டாவது செட்டை 21-15 என்ற நிலையிலும் வென்றார் சிந்து. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்/வீராங்கனைகளும் சொதப்பிய போதும், சிந்து மீது இந்தியர்கள் வைத்த நம்பிக்கை மட்டும் வீணாகவில்லை. அவர் வரலாறு படைத்துவிட்டார்.

Also Read: டோக்கியோவில் கூட்டம் கூடி மதுவிருந்து நடத்தியதால் சர்ச்சை; ஒலிம்பிக் வீரர்களை கடுமையாக எச்சரித்த CEO!