Sports

மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று : தொடர்ச்சியாக பிரச்சினைகளை சந்திக்கும் சி.எஸ்.கே!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு வீரருக்கு கொரோனா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது பாதிக்கப்பட்டுள்ள அந்த வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் சமீபத்தில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள வலது கை ஆட்டக்காரர் எனவும், அவர் ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை விளையாடியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிசிசிஐ-ன் அதிகாரப்பூர்வ ஐ.பி.எல் தளத்தில் மொத்தம் 1,988 கொரோனா பரிசோதனைகள் நடைபெற்றதாகவும், அதில் 13 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் இருவர் வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எந்த விதமான கோவிட் 19 அறிகுறிகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ”பிசிசிஐ டிரீம் 11 இந்தியன் பிரிமியர் லீக் 2020 தொடருக்காக அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டது.

ஒரே அணியில் 13 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்குப் பிரச்சினைதான் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டு வீரர்கள் இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வார்கள் என்பதும் சந்தேகத்துக்கு இடமானது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Also Read: IPL 2020 தொடரிலிருந்து வெளியேறினார் சுரேஷ் ரெய்னா - என்ன காரணம்?