Sports

“எனது மகிழ்ச்சி என்பது என்ன தெரியுமா?” : குடும்ப வாழ்க்கை குறித்து தோனி ஓப்பன் டாக்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக பகிர்ந்துகொண்டார்.

அப்போது கலகலப்பாக பேசத் தொடங்கிய மகேந்திர சிங் தோனி கூறுகையில், “எனக்கு சாக்‌ஷியுடன் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போதிருந்து வீட்டின் அனைத்துப் பொறுப்புகளையும், நிர்வாகத்தையும் அவர்தான் கவனித்துவருகிறார். ஒருபோதும் என் மனைவியின் செயலுக்கு நான் இடையூறு செய்ததில்லை, செய்யவும் மாட்டேன். என்னுடைய மகிழ்ச்சி என்பது அவர் மகிழ்ச்சியாக இருப்பது தான்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருமணத்திற்கு முன்பு அனைத்து ஆண்களும் சிங்கம் போல் இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்திற்குப் பின்பு அது தொடராது. எல்லாம் மாறிவிடும். வயதான காலத்தில் கணவன் - மனைவிக்குமான உறவு மேலும் பலமாகும். குறிப்பாக, திருமண வாழ்வின் உண்மையான அர்த்தமே 50 வயதாகும் போதுதான் தெரியும். உங்களது வழக்கமான செயலில் இருந்து நீங்கள் அப்போது தான் விலகிச் செல்வீர்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு தோனி பதிலளித்து பேசினார். அவரின் பதில்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.