Sports

டி.என்.பி.எல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் T20 தொடர் 2016ம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான டி.என்.பி.எல் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

இதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் தமிழக வீரர்களும், இந்திய அணியின் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

டி.என்.பி.எல் போட்டியில் பங்கேற்ற வீரர்களைச் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில், டி.என்.பி.எல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலர் பார்த்தசாரதி, ''தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அமைக்கப்பட்ட குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. டி.என்.பி.எல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. டி.என்.பி.எல் நம்பகத்தன்மையை காக்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.