Sports

மொத்த சம்பளத்தையும் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு கொடுத்து நெகிழவைத்த சஞ்சு சாம்சன்!

தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இந்திய ஏ அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. தொடரின் கடைசி போட்டி நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மழைக்காரணமாக அந்தப்போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அப்போட்டியில் இந்திய ஏ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. அந்தப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

போட்டியின் முடிவில் பேசிய சாம்சன், இந்தப் தொடருக்கான தனது மொத்த ஊதியத்தையும், மைதானத்தின் ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது “ இன்றைய போட்டி நடைபெற்றதற்கு மைதான ஊழியர்கள் தான் முக்கிய காரணம். மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்தது. அதனைப் போக்க அவர்கள் தீவிரமாக பணியாற்றினார்கள். அவர்கள் இல்லையென்றால் போட்டிகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே என்னுடைய சம்பளமான 1.5 லட்சம் ரூபாயை அவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

சஞ்சு சாம்சனின் இந்த செயல், நன்மதிப்பை பெற்று வருகிறது.