Sports

உலகக்கோப்பை 2019 : நாளை மேட்சில் தினேஷ் கார்த்திக், சாஹல் இல்லையா? களமிறங்கப் போவது யார்?

உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. உலகக்கோப்பை தொடரில் ‘லீக்‘ ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் (06.07.2019) முடிந்தன. ‘லீக்’ சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் டாப் ஆர்டர், மாஸான ஃபார்மில் இருக்கிறது. ஓப்பனர் ரோஹித் ஷர்மா, இதுவரை 5 சதங்களை கடந்து, 647 ரன்களைக் குவித்துள்ளார். கோலி அடுத்தடுத்த அரைசதங்கள் மூலம் 441 ரன்கள் குவித்துள்ளார். மேலும், கே.எல்.ராகுல் ஒரு சதம், இரு அரைசதம் உட்பட 359 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் ஸ்திரத்தன்மையுடன் இல்லாதது பிரச்னையாக உள்ளது. இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங்கால் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து மிடில் ஆர்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.

குறிப்பாக விஜய் ஷங்கருக்கு பதில் ரிஷப் பன்ட், கேதார் ஜாதவுக்கு பதில் தினேஷ் கார்த்திக் ஆகியோரை வங்கதேசப் போட்டியில் இந்திய அணி நிர்வாகம் களமிறக்கிவிட்டது. ரிஷப் பன்ட் இரண்டு ஆட்டங்களில் நன்றாக விளையாடியுள்ளார். தோனி, உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து ரன் அடித்து வந்தாலும், அவரின் நிதானமான ஆட்டம் பலதரப்பிலும் கேள்வியெழுப்பியுள்ளது.

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பெரும்பாலான ஆட்டங்களில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளது. 50 ஓவர்களையும் ஐந்து பந்துவீச்சாளர்களே மாற்றி, மாற்றி வீசினர். இது தவறான அணுகுமுறை என்கிறார்கள் சில விமர்சகர்கள்.

யாரேனும் ஒரு பந்துவீச்சாளர் குறிப்பிட்ட போட்டியில் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினாலும், பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லாததால், அவர்கள் கையிலேயே பந்தை மீண்டும் கொடுக்கவேண்டிய நிலை உள்ளது.

அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்க இருக்கும் இந்திய அணி, கூடுதல் பந்துவீச்சாளரோடு களமிறங்க வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் ரன்களை வாரி இறைத்தாலும், மாற்று பந்துவீச்சாளர் உடனடியாக தயார் நிலையில் இருக்க வேண்டும். அது தான் சரியான திட்டமாக இருக்கும். எனவே, தினேஷ் கார்திக்குக்கு பதிலாக ஜடேஜா அல்லது மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை சேர்க்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

குல்தீப் யாதவ் நல்ல பந்துவீச்சாளர் என்றாலும், அவரால் இந்த உலகக்கோப்பை தொடரில் சரியாக விக்கெட் எடுக்க முடியவில்லை. ஆனால் சாஹல் தொடர்ந்து நன்றாகப் பந்து வீசி வருகிறார். எனவே குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை.

வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ரா மட்டுமே நன்றாக வீசி வருகிறார். விக்கெட்களை எடுத்தாலும் ஷமி ரன்களை வாரி வழங்குகிறார் என்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.

அந்த ஆட்டத்தில், 1 விக்கெட் மட்டுமே எடுத்து 70 ரங்களுக்கு மேல் வாரி வழங்கினார். புவனேஸ்வர் குமார் ஆட்டத்தின் தொடக்கத்தில் ரன்களை கொடுத்தாலும் கடைசிக் கட்டத்தில் ரன்களை வழங்காமல் கட்டுப்படுத்தினார். எனவே, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்ரிட் பும்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியா - உத்தேச அணி :

ரோஹித் சர்மா

கே.எல்.ராகுல்

விராட் கோலி

ரிஷப் பன்ட்

எம்.எஸ்.தோனி

ஹர்திக் பாண்டியா

தினேஷ் கார்த்திக் \ ரவீந்திர ஜடேஜா

புவனேஸ்வர் குமார்

யுஸ்வேந்திர சாஹல்

முகமது ஷமி

ஜஸ்ப்ரிட் பும்ரா