Sports

பேட்டிங் சொதப்பினாலும் பவுலிங்கில் அசத்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயித்த 269 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த உலகக்கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காத அணியாக விளங்கி வருகிறது இந்திய அணி. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 48 ரன்களிலும் ரோஹித் சர்மா 18 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் விராட் கோலி போராடி அரைசதம் கடந்தார்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 37 ரன்களைக் கடந்தபோது டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான சர்வதேச போட்டிகளையும் சேர்த்து 20,000 ரன்களைக் கடந்தார். இந்த மைல்கல்லை மிகக் குறைவான ஆட்டங்களில் (417) கடந்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.

தொடர்ந்து விளையாடிய கோலி 72 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்தனர். தோனியும் தன் பங்குக்கு மெதுவாக விளையாடி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

45-வது ஓவருக்கு மேல் நிதான ஆட்டத்தைக் கைவிட்டு லேசான அதிரடி காட்டிய தோனியும், பாண்ட்யாவும் ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினர். பாண்ட்யா 46 ரன்களில் அவுட்-ஆக, 56 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி.

இதையடுத்து, இந்திய அணி நிர்ணயித்த 269 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 143 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தத் தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத ஒரே அணி எனும் பெருமையைத் தக்கவைத்துக்கொண்டது இந்தியா. 6 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, ஒரு ஆட்டம் முடிவில்லை என 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அடுத்த ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.