Sports

“நான் சாப்பிடுவதற்காக என் தந்தை மாட்டுக்கு வைத்த உணவை சாப்பிட்டார்”- கதறி அழுத தங்க மகள்

ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, செய்தியாளர் சந்திப்பின் போது தனக்காக தன் தந்தை சந்தித்த கஷ்ட்டங்களை நினைத்து உடைந்து அழுதார்.

சாப்பிட வழியில்லாததால, 2 வருஷம் பயிற்சி செய்யாம இருந்தேன்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தடைகளை தாண்டி சாதித்துக் காட்டியுள்ள கோமதி, தான் எதிர்கொண்ட சிரமங்கள், வேறு எந்த தடகள வீரர்களுக்கும் நேரக் கூடாது என்றும், அதற்கு அரசு தேவையான உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ” சாப்பிட வழியில்லாததால, 2 வருஷம் பயிற்சி செய்யாம இருந்தேன். கடந்த ஒரு வருசமா தான் மீண்டும் பயிற்சியை தொடங்கினேன். என் அப்பாவுக்கு கால் நடக்க முடியாது. நான் சாப்பிடனுங்கிறதுக்காக, எங்க அப்பா, மாட்டுக்கு வச்சிருந்த சாப்பாட்ட சாப்பிட்டாரு. அத நினைக்கும் போது தான் என்னால் தாங்கிக்கவே முடியல. என் அப்பாவ நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று மனம் உடைந்து அழுதார்.

நான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் படக்கூடாதுன்னு நினைக்கிறேன்

பின்னர் தொடர்ந்த கோமதி “ என் வாழ்க்கையோட ஒவ்வொரு நிலையிலும் கஷ்ட்டம் தான். நான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் படக்கூடாதுன்னு நினைக்கிறேன். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசாங்கம் தேவையான வசதிகளை செஞ்சு தரணும்.” என கோரிக்கை வைத்துள்ளார்.

“ நான் கடைசி 50 மீட்டர் இருக்குற வரைக்கும் இரண்டாவது இடத்துல தான் ஓடிக்கிட்டு இருந்தேன். ஆனால், அந்த கடைசி 50 மீட்டர்ல என் கடுமையான உழைப்பு கைகொடுத்தது. ஆசிய தடகள போட்டிகளில் ரெக்கார்டு டைமிங்கில் ஜெயிச்சிருக்கேன். என் வயசுல இனி யாரும் இந்த சாதனைய நிச்சயம் பண்ண மாட்டாங்க. இதே போல உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெயிக்கணும். அதுதான் என்னுடைய அடுத்த இலக்கு” என்றார்.

துயரங்களை மட்டுமே பார்த்து கசிந்த விழிகள், வெற்றி் தந்த பிரகாசத்தை கொண்டாடியபடியே அடுத்த இலக்கை நோக்கி தயாராகி வருகிறார் தங்க மகள் கோமதி.