Politics

“அனிதாவின் நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி மறுத்தது ஏன்?” : சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

சட்டப்பேரவையில் இன்று (செப்.01) கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று தங்கை அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள். அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல, தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பாகவும், அனிதாவின் குடும்பத்தினர் சார்பாகவும், தங்கை அனிதாவுடைய 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திட்டமிட்டிருந்தனர்.

எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நடத்தப்பட இருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு மற்றும் சென்னை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருக்காங்க. நினைவேந்தல் நடத்துவதற்கு அனுமதி கேட்டு 15 நாட்களுக்கு முன்பாகவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இது ஆர்ப்பாட்டம் என்று கூறி அனுமதி மறுத்துள்ளது.

தங்கை அனிதாவுடைய சகோதரர் மணிரத்னம் அவர்கள் என்னைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தார். நீட் கொடுமையால் இந்தியாவில் நடந்த முதல் மரணம் தங்கை அனிதாவுடைய மரணம். தங்கை அனிதா மரணமடைந்த போது, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அனிதா வீட்டிற்கே சென்று துக்கம் விசாரித்தார். எங்களுடைய தலைவரும் அன்றே சென்று அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இன்றைக்கு ஆளுங் கட்சியும் நீட்டை ஒழிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். ஆனால், ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்த அரசு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? என்பதை இங்கே கேட்க விரும்புகின்றேன்.

நீட் எதிர்ப்பின் அடையாளம் தங்கை அனிதா நினைவேந்தலுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும்.

அனுமதி மறுப்புக்கான காரணம் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் மற்றும் தேர்த் திருவிழா நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் கொடியேற்ற நிகழ்வு கடந்த வாரமே நிறைவடைந்துவிட்டது. அடுத்தகட்டமாக செப்டம்பர் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் தான் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இன்றைய தினம் அப்பகுதியில் பெரிய அளவில் மக்கள் கூட்டம் எதுவுமில்லை.

நேற்று மாலைகூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விழா நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்குக் கூட்டம் ஏதும் இல்லாத சூழலே நிலவுகிறது.

எனவே, இந்த நிகழ்வை நடத்த அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். அப்படி இயலாத பட்சத்தில், இன்றைய தினமே நினைவேந்தல் நாள் என்பதால், அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து உடனடியாக மாற்று இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Also Read: “தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!