Politics

“தமிழர்கள் படுகொ* செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது; த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?” : உதயநிதி கேள்வி!

கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள், அம்மாநில வனத்துறையினரால் சித்திரவதைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியான நிலையில், அது குறித்து இன்றளவும் தமிழ்நாடு அரசு சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

“கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள், அந்த மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அந்த மூன்று தமிழர்களும் சித்திரவதை செய்யப்பட்டு, மிக அருகிலிருந்து படுகொலை செய்யப்பட்டுள்ளது உடற்கூறாய்வில் உறுதியாகியுள்ளது. இதற்கு இந்த த.வெ.க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

குறைந்தபட்சம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதா? தென் மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்நாடு வந்த கர்நாடக முதலமைச்சரிடம் தமிழர்கள் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதா?

கர்நாடக மாநில காவல்துறைக்கு பதிலாக மேல்மட்ட விசாரணையை வலியுறுத்தியுள்ளேன். அதற்கு ஏதேனும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?

கர்நாடகத்தில் படுகொலை செய்யப்பட்ட மூன்று தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.”

Also Read: “அருமை நண்பர் கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!