Politics

“மக்களின் மனசாட்சியாய் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள்!” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவிற்கு பிறகு, தொடங்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால், எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான காவிரி நதிநீர் உரிமையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மேகதாது அணைக் கட்டுவதில் கர்நாடக அரசு பெரும் முனைப்பு காட்டி வரும் வேளையில், இந்த கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது.

மேலும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு சட்ட முன்வரைவு, மீண்டும் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படலாம் என்ற பேச்சும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், காணொளி வாயிலாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, தனது சமூக வலைதளப் பக்கத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டது பின்வருமாறு,

“மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்படுவார்கள்!”

Also Read: ‘புது வடிவம் பெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஐபிஎல் போல் எலிமினேட்டர் சுற்றுகள்.. சுவாரசியமான விதிகள்!’