Politics
‘பவர் சென்டர்’ ஆக முயற்சிக்கும் ஆளுநரின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் : கி.வீரமணி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பதில் ஆளுநரின் தலையீடு கூடாது என கண்டனம் தெரிவித்து தி.க தலைவர், ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை!
கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் பணி, அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையீட்டாலும், துணைவேந்தர் தேடுதல் குழுவில், விதிகளுக்குப் புறம்பாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஒருவரும் இடம்பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாலும் தடைப்பட்டிருந்தது.
10 சட்டத் திருத்த மசோதாக்களை அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்தார்!
அதை எதிர்த்தும், அப்போது யு.ஜி.சி. கொண்டு வந்த புதிய விதியை எதிர்த்தும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதே வேளையில், துணைவேந்தர் நியமனத்தைத் தமிழ்நாடு அரசே (முதலமைச்சரே) மேற்கொள்ளும் வகையில் கொண்டுவந்திருந்த 10 சட்டத் திருத்த மசோதாக்களை அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்தார்.
பின்னர் அதை உச்சநீதிமன்றம் மூலம் போராடி, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய தீர்ப்பைத் தமிழ்நாடு பெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 140 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி 10 சட்டங்களும் நடைமுறைக்கு வந்தன.
தெளிவான இந்த வாய்ப்புகளுக்கு இடையில், தற்போது மொத்தம் 15 துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற சூழலில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடலுக்கான குழுவில், மூன்று பேருக்குப் பதிலாக 5 பேர் இடம்பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளர். இது சட்ட விரோதமாகும்.
1. பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும், மாநில அரசால் நிறைவேற்றப்படும் தனித் தனிச் சட்டங்களால் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் நிர்வாகமும் அச் சட்டங்களின் படியே நடைபெற வேண்டும். எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் மொத்தமாக ஒரு நடைமுறை என்று கொண்டு வரவே முடியாது – கூடாது!
2. பல்கலைக்கழகச் சட்டங்கள் நடப்பில் அமுலில் இருக்கும் சூழலில், அதன் விதிகளை மீறி, மற்றொரு நடைமுறையைக் கொண்டு வர முடியாது. ஒன்றிய அரசின் எந்தச் சட்டமும் மாநில அரசு இயற்றிய சட்டங்களை மீறிச் செயல்படுத்தப்பட (Over ride) முடியாது.
3. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) சட்டமும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் சட்டத்தை மீறிச் செயல்பட முடியாது.
4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 246 விளக்கும் அதிகாரப் பகிர்வின் படி, எந்தெந்தத் துறையில் சட்டமியற்றும் அதிகாரம் யாருக்கு என்பது ஏழாவது அட்டவணையில் (Seventh Schedule) தெளிவாக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாவதாக உள்ள மாநிலப் பட்டியலின் 32 ஆம் பதிவு மிகத் தெளிவாகவே இதனை வரையறுத்துள்ளது.
ஏழாவது அட்டவணை; பட்டியல் எண்-2 (மாநிலப் பட்டியல்)
பதிவு எண் 32. முதலாம் பட்டியலில் (ஒன்றியப் பட்டியல்) குறித்துரைக்கப்பட்டவை அல்லாத கூட்டுருமங்களைக் கூட்டுருமங்களாகப் பதிவுசெய்தல், ஒழுங்குறுத்துதல் மற்றும் முடிவுறுத்துதல்; மேலும், பல்கலைக்கழகங்கள்; கூட்டுருமமாகப் பதிவு செய்யப்படாத வணிக, இலக்கிய, அறிவியல், சமய மற்றும் பிற சங்கங்களும் கழகங்களும்;
இதன் படி, பல்கலைக்கழகங்களைப் பதிவு செய்தல் (உருவாக்குதல்), ஒழுங்குறுத்தல், முடிவுறுத்தல் (Incorporation, Regulation and winding up) ஆகியவை மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டவை.
5. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவினால் (Search Committee) தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரில் ஒருவரைத் தேர்வு செய்வதும் மாநில அரசின் உரிமையே! அது ஆளுநரின் பெயரால் வெளியிடப்படுகிறது என்பதனாலேயே, அது ஆளுநரின் முடிவுக்குட்பட்டது என்று பொருள் அல்ல! (மாநில அரசின் சில முடிவுகள், அறிவிப்புகள் ஆளுநரின் கையொப்பத்துடன் வெளிவருவது போன்ற நடைமுறை மட்டுமே இது)
மாநில அரசின் உரிமை, சட்ட ரீதியாக மிகத் தெளிவாக உள்ள இச் சூழலில், பல்கலைக்கழகங்களுக்கு அவசர அவசரமாகத் துணைவேந்தர்களை நியமிப்பது என்ற பெயரில் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இது காலாகாலத்திற்கும் தவறான முன் மாதிரியாக அமைந்துவிடும். சட்டத்திலேயே இடமில்லாத ஒன்றை சமரசப் போக்கு என்ற பெயரில் செய்ய அனுமதிக்க முடியாது.
இன்னொரு ‘பவர் சென்டர்’ ஆக முயற்சிக்கும் ஆளுநரின் முயற்சிகள் முளையிலேயே தடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் இதில் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
முதலமைச்சர் விஜய்க்கு “நாவடக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்று” : திமுக தகவல் தொழில்நுட்ப அணி தாக்கு!
-
இது Party FUND இல்லையா? இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி!
-
நேரத்திற்கு வருவது தவெக அகராதியில் இல்லை போல : கனிமொழி MP தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மகளிர் அணி கண்டனம்!
-
“முதலமைச்சர் விஜய் ஒரு கோயபல்ஸ்” - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!
-
“இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே; அந்த நினைவுக்கு நன்றி!” : 2009-ல் வெளியான முத்தமிழறிஞர் கலைஞரின் மடல்!