Politics
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதி கோரியுள்ள நிலையில், இதற்கு அனுமதி அளிக்ககூடாது என CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறிட்த்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ரூ. 425 கோடி மதிப்பீட்டில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலை கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எக்காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது என தமிழக மக்கள் போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 கிணறுகளை அமைக்க அனுமதி கோரியிருக்கிறது. ஏற்கனவே சிப்காட், அனல்மின் நிலையம், இறால் பண்ணைகள் அதிகம் உள்ள அம்மாவட்டத்தில் இந்த முடிவு மேலும் சுற்றுச்சூழலை சீரழிக்கும் நிலையை உருவாக்கும்.
இந்த 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் வங்கக் கடலில் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும், அப்பகுதியில் அதிக அளவில் உள்ள மாங்குரோவ் காடுகளும் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
காவிரி கடைமடை பாசனப்பகுதியான பரங்கிப்பேட்டை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்கு இத்தகைய செயல்பாடுகள் கூடாது என்ற சூழலில், தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும், வேளாண் நிலங்களிலும் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு உரிமம் வழங்கிய போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல கட்சிகளின் எதிர்ப்பாலும், பொதுமக்களின் பேராட்டத்தினாலும் அத்திட்டங்களுக்கு அப்போதைய மாநில அரசுகள் அனுமதி அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வதாரத்தை அழித்தொழிக்கும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாதென தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!