Politics

“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் ‘தமிழ்நாடு’தான் என இருந்த நிலை, தற்போது த.வெ.க ஆட்சியில் தடம் மாறி வருகிறது.

நாளுக்கு நாள் சிறுமிகளும், பெண்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய அரசும், காவல்துறையும் மந்தமாக செயல்பட்டு வருகிறது.

திரைக்கவர்ச்சியுடன் தொடங்கப்பட்ட த.வெ.க அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’, ரீல்சில் மட்டுமே அதிரடிக் காட்டி வருகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு படைக்கு ‘உதவி எண்’ கூட அறிவிக்காத நிலைதான் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

இப்படியான சூழலில், நேற்று ஒரே நாளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அரங்கேறியுள்ளன.

கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழப்பு.

திருப்பாச்சூர் கோட்டையில் 7ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.

காட்டுப்பாக்கத்தில் 9ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.

மணிமங்கலத்தை அடுத்த ஆதனூரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.

முதலமைச்சர் விஜய்யின் தொகுதியான பெரம்பூரில், 12ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறல்.

மயிலாப்பூரில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.

அம்பத்தூரில் 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி விடுதிக்கு அழைத்துச் சென்ற இரு இளைஞர்கள்.

தூத்துக்குடியில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய உபதேசியர்.

ராணிப்பேட்டையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

விழுப்புரத்தில் 16 வயது மாணவியை ஏமாற்றி பாலியல் தொல்லை.

திருப்பூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.

திருப்பூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

என பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது. எனினும், இதுவரை அதற்கு பொறுப்பேற்காதது மட்டுமல்ல, நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்கூட திறக்காத முதலமைச்சராக விஜய் தலைமைச் செயலகத்திற்கு நாள்தோறும் சோறு கட்டிக் கொண்டு சென்று, அங்கிருந்தே தன் கையால் எடுத்து தன் வாயில் உணவைப் போட்டுக்கொள்கிறார்.

இப்போக்கை கண்டிக்கும் வகையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில்,

“Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்

சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்

என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?

கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?

இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!