Politics

“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதம் மொத்தம் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, 5 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தொகுதி உடன்பாடும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

இந்த சூழலில் இன்று (மார்ச் 18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி உடன்பாடு முடிவு செய்யப்பட்டு கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் முன்னிலையில் கையெழுத்தானது. அந்த வகையில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி உடன்பாடு நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில்,

பாஜக ஒரு பதற்ற அரசியலை, வகுப்புவாத அரசியலை சுமந்து வருகிறது. அமைதியான தமிழ் மண்ணை சீர்குலைக்க துடிக்கிறது. எனவே, இந்த தேர்தலில் பாஜக, அதன் கூட்டணியை வீழ்த்துவதுதான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதல் குறிக்கோள்.

நாட்டின் இறையாண்மை, தேச ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம். அந்த அடிப்படையில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். திமுக எந்த அழுத்தமும் தரவில்லை, ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை. ஜனநாயக அடிப்படையில் இந்தக் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது." என்றார்.

Also Read: பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்