Politics

‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!

இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.3) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் மாநிலங்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாத்தி சல்மா, “தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டை முந்தைய ஆண்டைவிட 34 சதவீதம் குறைத்திருப்பதற்கான காரணங்கள் என்ன?

இந்தத் திட்டத்தின் கீழ் மாநில வாரியாக ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிதியின் விவரங்கள் மற்றும் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசு அளிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவை (Creamy layer) நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை திருத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த திருத்தத்திற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன?” என கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி, “தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இயங்கும் வந்தே பாரத் இரயில்களின் எண்ணிக்கை எவ்வளவு?

வரும் நிதியாண்டில் அரசு புதிதாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள வந்தே பாரத் இரயில்களின் தடங்கள் மற்றும் அது இணைக்கும் நகரங்கள் யாவை?

புதிய வழித்தடங்களை தேர்ந்தெடுக்க அரசு வகுத்திருக்கும் அளவுகோல்கள் என்ன?

புதிய இரயில்களுக்காக ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளின் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?” என ஒன்றிய அரசினரிடம் கேள்வி எழுப்பினார்.

Also Read: “ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!