Politics

"மனித குலத்திற்கே எதிரான தீட்டை அரசு அனுமதிக்காது" - திருப்பரங்குன்றம் மலை வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக்கோரியும் திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்கக்கோரி ராமலிங்கம் என்பவரும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும், மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கவும் கோரி பரசிவம் என்பவரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல் சிக்கந்தர் தர்கா பகுதியில் பாராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி சிக்கந்தர் தர்காவின் முதுநிலை மேலாண்மை அறங்காவலர் ஒசிர்கான் என்பவரும், சிக்கந்தர் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக சாலை, விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தக்கோரி அப்துல்ஜப்பார் என்பவரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக்கோரி சுவஸ்தி ஸ்ரீ லெட்சுமிசேனா பட்டாச்சர்ய மகா சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த 6 மனுக்களையும் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

இந்த வழக்கின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆடு கோழி பலியிடுவதால் மலையின் புனிதம் கெட்டு தீட்டுப்படும் என வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், "தீட்டு என்பதே மனித குலத்திற்கு எதிரானது. தீட்டு என்பது சாதியிலோ, மதத்திலேயோ, மனிதர்களுக்குள்ளேயே இருக்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.

மிகவும் பிரபலமான அழகர் கோவிலில் பதினெட்டாம்படி கருப்பிற்கு கிடா வெட்டிய பிறகுதான் பெருமாலையே தரிசிக்க செல்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது இது எப்படி தீட்டாகும்? எனவே தமிழ்நாடு அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது. நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேபோல் தர்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஆடு கோழி பலியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு" என வாதிட்டார். இதனை தொடர்ந்து, ஒன்றிய அரசு தொல்லியல் துறை தரப்பில் தனது வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Also Read: "பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது" - செல்வப்பெருந்தகை விமர்சனம் !