Politics
"பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது" - செல்வப்பெருந்தகை விமர்சனம் !
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் போலி வாக்காளர்களை கண்டுபிடித்து விடலாம் என்று ராகுல் காந்தி கூறியதற்கு பிறகு அதை வழங்க மறுப்பது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டு உறுதியாகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். ஆனால் அதற்கு நேரடியாக பதில் கூற முன்வராத தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி அவர்கள் பிரமாணம் எடுத்து குற்றச்சாட்டை கூறினால் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியிருக்கிறது. ஊடகங்கள் வாயிலாக திரை வெளியீட்டின் மூலம் புள்ளி விபரங்களோடு குற்றச்சாட்டுக்களை கூறிய பிறகு தேர்தல் ஆணையம் திசை திருப்புகிற வகையில் பதில் கூறுவது பொறுப்பற்ற செயலாகும். இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது 5 குற்றச்சாட்டுக்களை எழுப்பி இதற்கு தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நடைபெறவுள்ள பீஹார் சட்டமன்ற தேர்தலையொட்டி 65 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது தேர்தல் ஆணையம் வழங்க மறுத்துவிட்டது சுதந்திரமான தேர்தலுக்கு விடப்பட்ட சவாலாகும். இந்த மறுப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக நம்புவதற்கு இடமிருக்கிறது.
அதன்படி, முதல் கேள்வியாக டிஜிட்டல் வடிவத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை இந்திய மக்கள் படிக்கிற வகையில் ஏன் வெளியிட முன்வரவில்லை?. இரண்டாவதாக, தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஏன் அழிக்கிறது?. மூன்றாவதாக, தேர்தல் ஆணையம் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்வது ஏன்?. நான்காவதாக, எதிர்க்கட்சிகள் கூறுகிற குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் மிரட்டுவது ஏன்?. ஐந்தாவது கேள்வியாக, பாஜகவின் ஏஜென்ட் ஆக தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? என்று பகிரங்கமாக ராகுல் காந்தி கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார்.
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் போலி வாக்காளர்களை கண்டுபிடித்து விடலாம் என்று ராகுல் காந்தி கூறியதற்கு பிறகு அதை வழங்க மறுப்பது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டு உறுதியாகிறது. எனவே தேர்தல் முறைகேடு குற்றங்களுக்கு வாக்காளர் பட்டியல் ஆதாரமாக இருப்பதால் அதை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். ஒரு கோடி போலி வாக்காளர்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களித்துள்ளனர் என்று ஆதாரத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும்.
தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“இதுதான் பா.ஜ.க.விற்கு ஆதரவான வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியலின் (SIR) உத்தியா?” : தேஜஸ்வி கண்டனம்!
-
“ECI செயல்பாடு ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல, இது நாட்டைச் சூழந்திருக்கும் பேராபத்து!”: ஆசிரியர் கி.வீரமணி!
-
“கல்வி உரிமைக்காக பாடுபட்ட அறவழிப் போராளி முனைவர் வசந்திதேவி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்! : 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல்!
-
Two Way-ஆக மாறும் ஆழ்வார்பேட்டை மேம்பாலம்... சென்னை TTK சாலையில் போக்குவரத்து மாற்றம் - விவரம் உள்ளே !